தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு போட்டியை ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.


ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் வெடித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எழுச்சியின் எதிரொலியாக ஜல்லிக்கட்டுப்போட்டிக்கான தடையை உடனடியாக நீக்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது.

அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு மசோதா கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது அந்த மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த சட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இந்த சட்டம்  மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்படும். தமிழக ஆளுநர் மசோதாவில் கையெழுத்திட்டதும் இன்று மாலையே தமிழக அரசின் இதழிலில் ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பான அறிவிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


Blog Archive