7 வயது சிறுமி கொடூர கொலை.. ஐடி ஊழியர் கைது

சென்னை போரூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஹாஷினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.‌ கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதே குடியிருப்பில் மேல்தளத்தில் வசித்து வந்த தன்வந்த் என்பவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார்.‌ இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவீர விசாரணையில் இறங்கிய போது, சிறுமி ஹாஷினியை பாலியில் பலாத்காரம் செய்ததுடன் தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாக அவர் கூறினார். பின்னர் உடலை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலைக்கு எடுத்துச் சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் கிடந்த ஹாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தன்வந்தை கைது செய்து மதனபுரத்திற்கு கொண்டு சென்ற போது அவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினார். இந்தச்சம்பவத்தின் போது காவல்துறையினரின் வாகனமும் சேதமடைந்தது. தன்வந்த் மீது கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Blog Archive